ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை
|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||
|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||
* * *
வலைப்பூ அன்பர்களுக்கு,
“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 9
***ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி***
பாலா திரிபுரசுந்தரி என்பவள் யார்? என்ற கேள்விக்கு முதலில் எளியோன் அறிந்தவரை பதிலளிக்க விரும்புகிறேன்!
ஷோடசி மஹாமந்த்ரா எனும் 16 பீஜங்களுடைய மந்திரம் பதினாறு வயதினளாம் திரிபுரசுந்தரி எனும் முப்புர அழகிக்கும், நவாக்ஷரி எனும் 9 பீஜ மந்திரம் அழகிய வாலை எனும் பாலா திரிபுரசுந்தரிக்கும் உறியது ஆகும். அப்படியானால் அம்பிகையின் வயதுக்கு ஒரு பீஜமோ!
தச மஹாவித்யை தேவியர்கள் 1. காலீ(ளீ) 2. தாராதேவி, 3. திரிபுரசுந்தரி எனும் ஷோடஸி தேவி, 4. புவனேஸ்வரி தேவி, 5. பைரவி தேவி, 6. சின்னமாஸ்தா தேவி, 7. தூமவதி தேவி, 8.பகளாமுகி தேவி, 9. மாதங்கி தேவி மற்றும் 10. கமலா தேவி என க்ரந்தங்கள் விளக்குகின்றன!
இவற்றில் மூன்றாவதாக குறிப்பிட்ட திரிபுரசுந்தரி எனும் ஷோடஸி, ஆதி-பரா-சக்தி, மஹா திரிபுரசுந்தரி, ஸ்ரீ லலிதாம்பா, ராஜராஜேஸ்வரிதேவி, மற்றும் தந்த்ர பார்வதிதேவி எனவும் அறியப்படுகிறது.
குஹ்ய-அதிகுஹ்ய தந்திரம் எனும் நூலில், விஷ்ணுவின் பத்து அவதாரங்களின் மூலாதாரமே இந்த தச மஹா வித்யை தேவியர் எனவும் தெளிவாக்கப்பட்டுள்ளது.
ஷோடஸியாக 16 வயதினளாகவும், 16 பீஜங்கள் கொண்ட மந்திரத்தின் ஸ்வரூபமாகவும், 16 குணமுடையவளாகவும் விளக்கப்படுகிறது. இந்த தேவியை ஆராதிக்கும் முறைக்கே ஸ்ரீவித்யா எனவும், ஆராதிப்பவர் சிவனாக மட்டுமே இருக்கமுடியும் என்றும், அதுவே அம்மனிதரின் கடைசி பிறப்பாகும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இனி ஒரு க்ரந்தத்தில், காமாட்சி அம்மனே சுகுணாத்மிக த்ரிசக்தியாக அவதரித்து தனது திருவாயால் ‘க’ என உச்சரித்து தனது இடது கண்ணிலிருந்து ப்ரம்மனையும், ‘ஆ’ என உச்சரித்து வலது கண்ணிலிருந்து விஷ்ணுவையும், ‘ம’ என உச்சரித்து தனது நெற்றிக்கண்ணிலிருந்து மஹாதேவனையும் குழந்தைகளாக உருவாக்கினாள் என்றும், குழந்தை ப்ரம்மனுக்கு “ஷ்ருஷ்டி வித்யாத்மிக” க்ஷீரத்தையும், குழந்தை விஷ்ணுவிற்கு “ஸ்திதி வித்யாத்மிக” க்ஷீரத்தையும், குழந்தை மஹாதேவனுக்கு “லய வித்யாத்மிக” க்ஷீரத்தையும் புகட்டினாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண் என்பதையும், காம என்பதையும் சேர்த்து காமாட்சி என அழைத்தனரோ!
இதே க்ரந்தத்தில் கன்யகா பரமேஸ்வரி தேவியான காமாட்சி, திரிபுரசுந்தரியாக அவதரித்து பந்தகாசுரனை கண்டவுடன் கோபம் கொண்டு அஷ்டதஸ புஜ அல்லது 18 கைகளும் சக்ரம் முதலிய ஆயுதங்களும் தரித்து மும்மூர்த்திகள், தேவர்கள் முன்னிலையில் தனது ஒரு காலை அசுரனின் இதயத்திலும், மற்றொரு காலை அசுரனின் களுத்தினிலும் வைத்து அவனை மிதித்து அவனது தலையை இருகைகளினாலும் பிடித்து க்ஷணத்தில் அவனை அழித்தாள் எனவும், அவனது மகன்கள், உறவுகள் அனைத்தயும் நிர்மூலமாக்கியபின், அசுரனின் உடலை பாலாம்பிகா ரூபத்தில் சர்வாலங்கிருதளாய், இழுத்து வந்தாள் என்கிறது.
இன்னொரு க்ரந்தத்திலோ, அன்னையை நோக்கி பல ரிஷிகள் ஒன்று சேர்ந்து யாகம் செய்தபொழுது, ஹோம அக்னியிலிருந்து பாலா ரூபத்தில் “ஆதிபரை” தர்சனம் கொடுத்து, என்ன வரம் வேண்டும் என கேட்க, ரிஷிகளானவர்கள், அம்பிகையை பலவாரு துதித்து, எங்களுக்கு சம்பூரண அஷ்ட மஹா சித்திகளை அருளவேண்டும் என்றும், அம்பிகையே உன்னை இந்த ரூபத்தில் வழிபடும் யாவர்க்கும் அவர் அவர் கோரியதை அனுக்ரஹிக்க வேண்டும் என வேண்டினராம். “அவ்வாரே” என்று அம்பிகை அருளினாளாம்!
லலிதா ரஹஸ்ய சஹஸ்ரமோ, தனது 965 வது நாமத்தில் “பாலா” எனவும், தனது 966 வது நாமத்தில் லீலாவினோதினி எனவும் பரப்ரம்ம ஸ்வரூபிணியை குழந்தையாக சொல்கிறது. இதன் 74 ஆவது வரியில், பண்டாசுரனின் 30 மகன்களையும் பாலாம்பிகா அழித்தாள் (பண்டபுத்ர வதோத்யுக்தா பாலா விக்ரம நந்திதா) என தெரிவிக்கிறது
இன்னும் பல க்ரந்தங்களில் பாலாம்பிகை வ்ருத்தங்கள் உளது.
இங்கு காரணமாகவே க்ரந்தங்களின் பெயர் வெளியிடவில்லை. இவை எல்லம் விட ஒரு முக்கிய விஷயம் நினைவில் நிற்க!
அன்னை பாலாம்பிகையின் மந்திர சித்தி இல்லாமல், ஸ்ரீ சக்ர உபாஸனை செய்யக்கூடாது என்பது விதியாகும்.
அம்பிகை பாலாவின் மந்திரங்கள் எப்படி வின்யாசம் செய்யப்பட்டுள்ளது க்ரந்தங்களில் என்றும், அந்த மந்திரங்களின் மகிமைகளையும் அம்பிகையின் ஆராதனை முறைகளையும் அடுத்தபதிவில்.
***
You must be logged in to post a comment.